வாழையடி வாழையென வாழ்கவென
பெரியவர்கள் வாழ்த்துரை வழங்குவார்கள். அதன் உள்அர்த்தங்களை அறிந்து கொள்ளும்
முனைப்பின்றி கடந்து செல்பவர்களே அநேகம். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ‘தலைமுறைகளின்’ வரலாறு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. நாகரீக உலகத்தின்
அடையாளம் என்று ‘பெற்ற தாய், தந்தையை’ கூட ஒதுக்கிவிட்டு தனிக்குடித்தனமாக வாழத் துவங்கிவிட்ட இன்றைய சூழலில் தலைமுறைகளின்
வாழ்வியலும், அவர்களது கிளை உறவுகளும் தேவையற்ற சுமையாகிப்
போனதில் வியப்பில்லை. குடும்ப விழாக்களுக்கு பெயர் போட்டு அச்சடித்து வரும் நிறைய
பெரியவர்கள் ‘தனது உறவுமுறை’ சொல்லி
உங்க அய்யாவுக்கு தெரியும். உங்களுக்கு எங்க தெரியப்போகுது. வந்தா போனாத்தானே
தெரியும் என நொந்து கொள்வார்கள். காரைக்குடி பகுதி செட்டியார்கள் ஒவ்வொரு
குடும்பத்தினரும் பத்து பதினைந்து தலைமுறைப் பெயர்களைச் சொல்லுகிறார்கள், எழுதுகிறார்கள்.
நாம் அத்தகைய எவற்றையும்
ஞாபகம் வைத்துக் கொள்வதில்லை என்பதைவிட அறிந்துகொள்வது கூட இல்லை. ‘நம்முடைய பேரனுக்குப் பேரன்
நம்மை அறிந்திருக்க மாட்டான்’ என்பது எவ்வளவு கொடுமையானதோ, அதற்கு இணையானது நாம் நமது முன்னோர்களை அறிந்திராமல் வாழ்வது. இன்றைய
நாட்களில் ஒன்றிரண்டு தலைமுறை முன்னோர்களைப்பற்றி அறிந்து வைத்திருக்கும் நபர்கள்
மிகக்குறைவே. எனக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்கிவிட்ட நிலையிலும், எனது சொந்த கிராமத்தினர் ‘கணேசத்தேவர் பேரன்’ என்றுதான் சொல்ல விரும்புகிறார்கள். நீதிமன்றங்களிலே உரக்கச் சொல்வது போல
‘நாகுத்தேவர் வகையறா’ என்றுதான்
பேசுகிறார்கள். ஆக, நானென்பது நானல்ல இந்த வகையறாக்கள் தான்
நான்! இவர்கள்தான் எனது ஆணிவேர். இவர்களது பழமையும்,
பெருமையும், குடும்ப முறைகளும் எனது குருதியிலே பதிந்து
கிடக்கிறது.
“தாயைப் போல பிள்ளை
நூலைப் போல சேலை” என்று தமிழில் பழமொழி உண்டு. இதனை தொல்காப்பியரும் ‘பிள்ளை என்பவன் தந்தையின் மறு
அச்சு என்கிறார். (தந்தையர் ஒப்பர் மக்கள்- தொல்-1092) ஆக தந்தையின் பிரதியாகிப்
போன எனக்குள் ‘தந்தையின் தந்தையென’
ஆயிரம் தலைமுறைகளின் வாசம் அடிக்கவே செய்கிறது. மறத்தமிழர் சேனை இயக்கத்தின் மாநில
அமைப்பாளர் என்கிற முறையில் பல நேரங்களில் ‘கலப்பு
திருமணத்திற்கு எதிராக’ பதிவிட, பேச
நேர்கின்ற பொழுதுகளில் அகநானூறும், புறநானூறும் போற்றிப்
புகழ்ந்த இந்த சாதியின் பழைமையை சிதைக்க வரும் ‘தேவர் சாதி
தலைவர்கள்’ தங்களது சொந்த வரலாற்றை சொல்லிவிட்டு வாருங்கள்
என்பேன். அவர்களின் சொந்த வரலாறு எனும் குடும்ப வரலாறு என்பது இன்றளவும் அவர்களால்
சொல்ல முடியாததாகிவிட்டது. என்னுடைய கொடிவழியினையாவது யாவரும் அறிகிற வகையில்
படையலிட வேண்டுமென்பது நீண்ட நாள் ஆசை. அந்த ஆசைகளோடு கொடி வழி முன்னவர்களையும், கிராமத்தையும், சமூகத்தையும் அதன் வரலாற்று பழமை
மாறாமல் பாதுகாத்திடல் எமது கடமைகளில் ஒன்றாகிறது.
பண்டைத் தமிழ்ச்
சான்றோர்கள் தங்களது வாழ்வியலை ‘அகம்’ ‘புறம்’ என இரண்டு பிரிவுகளாக வகுத்து, அக வாழ்வின்
கூறுகளாக காமம், குடும்ப வாழ்வு,
ஒருதலைக் காமம், இன்பம் ஆகியவற்றையும் புற வாழ்வின் கூறுகளாக
ஆண்மை, வீரம், போர், வீரமரணம் ஆகியவற்றையும் பிரித்துள்ளனர். அதனைப்போலவே, நிலத்தையும் ஐவகையாகப் பிரித்து வைத்துள்ளனர். தொல்காப்பியர் காலத்தில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்
ஆகிய நால்வகை நிலங்களே கூறப்பட்டுள்ளன. பிறகு சிலப்பதிகாரத்தில் ஐந்தாவது நிலமான ‘பாலை’ பிறக்கும் வகையை இளங்கோவடிகள் பதிவு
செய்துள்ளார்.
"முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து
நல்லியல் பழிந்து நடுங்குதுய
ருறுத்துப்
பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்"
(சிலப்.
காடு. 64-66)
ஆக, பாலைக்கென்று தனியாக
தமிழ்நிலத்தில் இடமில்லை. முல்லையும், குறிஞ்சியும் கதிரவன்
வெயிலால் அதன் இயல்பை இழந்து, வளமையற்ற பகுதியாக கிடக்கையில்
அது பாலை நிலமாக கருதப்பட்டுள்ளது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் பிரிவையும், அதன் துயரத்தையும் பாலை நிலத்திற்குரியதாக்கியுள்ளனர். பாலையின் தெய்வமாக
‘கொற்றவை’ யும்,
அங்கே வாழ்ந்த மக்கள் மறவர், மறத்தியர், எயினர், எயிற்றியர், காளை, விடலை எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மறம் என்கிற சொல்லுக்கு
வீரம், கொலை என்றும், மறத்தொழில் என்பது கொலைத்தொழில் எனவும், மறவன்
என்றால் கொலை செய்பவன், வீரன் என்றும் தமிழ் அகராதி அர்த்தம்
தருகிறது. மறவர்கள் போர்த்தொழிலை
அடிப்படையாகக் கொண்டவர்களாகவும், போர் என்றால் மிகுந்த
மகிழ்ச்சி கொள்பவர்களாகவும், போர்க்களத்திற்குள்
புகுந்துவிட்டால் யார் தடுத்தாலும் இடையில் நிறுத்துகிற வழக்கமற்றவர்களாகவும்
இருந்ததாக சங்க நூல்கள் பதிவு செய்துள்ளன. மேலும், போரும்
போர் நிமித்தமான வாழ்வும், போரில் உயிர் நீத்து ‘நடுகல்’ ஆவதும் மிகுந்த கெளரவம் என கருதியுள்ளனர். ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி’ என புறப்பொருள் வெண்பா மாலை என்கிற இலக்கண நூல் சான்று பகருகிறது. மறவர்
என்கிற பெயர் முதலில் காரணப்பெயராகவும் பின்பு அகமண முறைகளால் இயற்பெயராகவும்
உருவெடுத்து தென்தமிழகத்தில் பரவி வாழக்கூடிய முதன்மை சமூகத்தை அடையாளம் செய்து
வருகிறது.
உட்பகை ஒருதிறம் பட்டெனப், புட்பகைக்கு
ஏவான் ஆகலின், சாவோம் யாம் என,
நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்பத், (புறம் 68.11-13)
விழுத்தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர்
எழுத்துடை நடுகல் இன் நிழல் வதியும் (அகநானூறு 53)
எழுத்துடை நடுகல் இன் நிழல் வதியும் (அகநானூறு 53)
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர். (குறள் : 778)
போரெனிற் புகலும் புனைகழன் மறவர் (புறம் :31.9)
மறவர்களிலும் பல வகையினர்
உண்டு. செம்பிய நாட்டு மறவர், கொண்டையன் கோட்டை மறவர், அஞ்சு கோட்டை மறவர், காரண மறவர், உப்புக்கோட்டை மறவர், காருகுறிச்சி மறவர், சிறுதாலி கட்டிய மறவர், பெரிய தாலி கட்டிய மறவர், பாசிகட்டி மறவர், கன்னிகட்டி மறவர், அணில் ஏறாக்கோட்டை மறவர் என பல
வகையினர் தங்கள் வாழ்வியல், போர் முறை,
வழிபாடு, இருப்பிட மண் சார்ந்து பலதரப்பட்ட பண்பாடுகளோடு
அவரவர்களுக்குரிய அடையாளங்களோடு இன்றளவும் வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்களில், தென்பகுதியின் ஆட்சியாளர்களாக
இருந்த செம்மநாட்டு மறவர் என்கிற சொல் வழக்கமுடைய செம்பிய நாட்டு மறவர்களுக்கு, செம்பியன் நாட்டு மறவர் என்கிற பெயருமுண்டு. செம்பியன் என்றால் சோழன்
என்றும் பொருள் விளங்கும். செம்பிய மறவர்கள் சோழ நாட்டிலிருந்து படையெடுத்து
பாண்டிய நாடு வந்தவர்கள் எனவும், அதன் காரணமாக சோழ நாட்டில்
இருக்கின்ற பல கிராம பெயர்கள் இங்கேயும் இருக்கின்றன எனவும் ஆய்வாளர்கள்
தெரிவிக்கின்றனர். மேலும், தனது பெயருக்கு பின்னே ‘தேவர்’ என்கிற பட்டத்தை போட்டுக்கொள்ளும்
வழக்கமுடையவர்கள் ஆவர். இராமநாதபுரம், சிவகங்கை அரசர்கள் ‘செம்பியன் நாட்டு மறவர்’ சாதியினை சார்ந்தவர்கள்
தான். இராமநாதபுரம் மன்னர்கள் சேதுபதி என்கிற பட்டத்தோடு மக்களாட்சி மலரும் வரை
இந்த மண்ணை அரசாண்டடு வந்துள்ளனர்....
மேலும் வாசிக்க ..... http://pudhumalarar.blogspot.in/p/blog-page_12.html பக்கத்தை சொடுக்கவும். அல்லது புதுமலர் பிரபாகரன் பெயரை அழுத்தவும்.
No comments:
Post a Comment